Saturday 20 June 2020

”பள்ளிக்கு நான் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்” - இட்லி கடை நடத்தி வரும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்




”பள்ளிக்கு நான் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்” - இட்லி கடை நடத்தி வரும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் தற்போது வீதிக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீட்டித்தது.இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மக்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. ஊரடங்கு காரணமாக பல துறைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனியார் பள்ளிகளும், அதில் பணியாற்றி ஆசிரியர்களும் தற்போது கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.

ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி  அதில் வரும் வருமானம் மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் என்று பள்ளிகள் கருதினாலும், வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாதது, டவர் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களால் ஆன்லைன் வழியாக பாடங்களை சரிவர கற்க முடிவதில்லை. அப்படியே ஒருவேளை மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்றாலும் அதற்கு உண்டான கட்டணத்தை அவர்களது பெற்றோர்களால் தற்போதையை சூழ்நிலையில் கட்ட முடிவதில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட தெலங்கானவைச் சேர்ந்த கம்மம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரகணி ராம்பாபு கூறும்போது “ ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனே, பள்ளி நிர்வாகம் பள்ளிக்குத் தற்போது தலைமை ஆசிரியர் தேவையில்லை எனக் கூறிவிட்டது. என் வீட்டில் எனது வருமானம் மட்டுமே முக்கிய பிரதானமாக இருந்தது.

மனைவியும் வேலைக்குச் செல்லவில்லை. அதனால் கடந்த 5-ஆம் தேதியிலிருந்து 2000 ருபாய்க்கு வண்டி ஒன்று வாங்கி வீதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறேன். தினமும் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தோசை,வடை உள்ளிட்டவற்றையும் விற்று வருகிறேன். முன்பு மாதம் 22,000 சம்பாதித்த நான் தற்போது தினமும் 200 ரூபாய் ரூபாய் மட்டுமே சம்பாதித்து வருகிறேன்” என்றார்.

நன்றி: புதியதலைமுறை

No comments:

Post a Comment